Tuesday, June 9, 2015

சிலப்பதிகாரம்-2

இளவேனிற் பருவமும் வந்தது. கோவலின் பிரிவாலே துயரடைந்த மாதவி, தன் தோழி வசந்தமாலையைத் தூது அனுப்பினாள். தன்பால் வந்த தூதினைக் கோவலன் மறுத்தான். வசந்தமாலையிடம், ஆயிழையே! அவளோர் ஆடல் மகள்! ஆதலினாலே, என்பாற் காதல் மிகுந்தவளேபோலே நடித்த நாடகமெல்லாம், அவளுடைய அந்தத் தகுதிக்கு மிகவும் பொருத்தம் உடையனவே!தன்மேல் அவளுக்கு உண்மையான காதல் எதுவும் இல்லை எனக் கூறி மாதவியை நாடி வர மறுத்தான். அதனால் மாதவி மனம் துடித்தாள். இளவேனிற்கு முந்திய பருவத்தே பிரிந்தவன், இள்வேனிற் காலத்திலாவது வருவானென மயங்கியிருந்த அவள் மனம், இளவேனிற்காலம் வரவும் அவன் வாராமை கண்டு, நிலை கொள்ளாது தவிக்கின்றது.. இளவேனில் பற்றிய ஏக்கமே,கோவலனிடம் கண்ணகி நினைவையும் தூண்டிற்று .


கண்ணகி , தேவந்தியிடம் "யான், இனி என் கணவனுடன் கூடுதலைப் பெறவே மாட்டேன். என் நெஞ்சம் ஏனோ வருந்துகின்றது! கனவிலே நேற்றிரவு கோவலன் வந்தான். என் கைப்பற்றி'வருக! என அழைத்தான். இருவரும் வீட்டைவிட்டுப் போய், ஒரு பெரிய நகரினுள் சென்றோம்.சேர்ந்த நகரிலே என் மீது தேளினைப் பிடித்து இட்டவரைப்போலக், 'கோவலனுக்கு ஒரு தீங்கு விளைந்தது' என்று எங்கட்கு ஏலாத்தோர் வார்த்தையினைச் சொல்லினர். அது கேட்டுக் காவலன் முன்னர்ச் சென்று யானும் உண்மையைக் கூறி வழக்கு உரைத்தேன். காவலனோடு, அவ்வூருக்கும் நேரிட்ட தீங்கு ஒன்றும் உண்டாயிற்று. அந்நிலையே யான் பேச்சற்றேன்" என்று தான் கண்ட கனவை எடுத்துரைத்தாள்.

 கோவலன் கண்ணகியிடம் மீண்டும் வந்தான். தன் மனைவியின் வாடிய மேனியும் வருத்தமும் கண்டான். தம் குலத்தவர் தந்த மலைபோலும் பெரிய பொருட்குவைகள் எல்லாமே தொலைந்து போயின;அதனால் வந்த இல்லாமை நிலை தனக்கு வெட்கத்தைத்தருவதாகவும் கூறினான். கண்ணகியோ தன் திருமுகத்திலே முறுவலினைக் காட்டி"சிலம்புகள் உள்ளன; எடுத்துக் கொள்ளும்" என்றாள். காதலியான கண்ணகியானவள் கண்ட தீய கனவு, கரிய நெடுங் கண்களையுடைய மாதவியின் பேச்சினையும் பயனற்றுப் போகச் செய்தது. பழவினை வந்து கோவலனின் நெஞ்சினைத் தன் போக்கிலே ஒருப்படுத்தப், பொழுது விடியுமுன் இருவரும் தம் வீட்டைவிட்டும், புகாரை விட்டும் வெளியேறி, மதுரை நோக்கிப் பயணமாயினர். 

Friday, March 6, 2015

சிலப்பதிகாரம்-1



சிலம்பு+அதிகாரம் என்பதே சிலப்பதிகாரம் ஆயிற்று.இக்காப்பியத்தில், இயல்,இசை,நாடகம்  என மூன்றையும் காணலாம்.
, கோவலன் என்னும் குடிமகனைப் பற்றிய காப்பியம் ஆனதால்'குடிமக்கள் காப்பியம் என்றும் கூறப்படுகின்றது.இதை எழுதியவர் இளங்கோவடிகள் ஆவார்.இவர் சேரன் செங்குட்டுவனின் தம்பி ஆவார்.

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள்.
 இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

இந்நூல் புகார் காண்டம், மதுரைக் காண்டம் மற்றும் வஞ்சிக் காண்டம் எனும் உட்பகுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது.

இனி சிலப்பதிகாரம் காப்பியத்தின் கதை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

1-கண்ணகி-கோவலன்-மாதவி

காவிரிப்பூம்பட்டினத்தில் மாசாத்துவான் என்றொரு வணிகன் இருந்தான்.அவனது மகன் கோவலன்.கோவலன் சிறுவயது முதலே ஏழைகளுக்கு உதவும் நற்பண்பு கொண்டவன்.கலை ஆர்வம் மிக்கவன்.

அதே ஊரில் இன்னொரு பெரிய வணிகன் இருந்தான்.அவன் பெயர் மாநாய்கன்.அவனது மகள் கண்ணகி.கண்ணகி, அழகும், குணச்சிறப்பும், கொண்டவள்.

கோவலனுக்கும், கண்ணகிக்கும் மணம் முடிந்து இன்பமாக வாழ்ந்து வந்தனர்.

மாதவி என்னும் ஆடல் மகள் சோழன் முன்னர் தன் திறமையையெல்லாம் காட்டி ஆடினாள்.அதனால், ஆயிரத்து எட்டுக் கழிஞ்சூப் பொன்னை பரிசாகப் பெற்றாள்.அந்நாட்டு நடைமுறையான இயல்பிலிருந்து வழுவாமல் அரசனின் பச்சை மாலையும், 'தலைக்கோலி' என்ற பெயரையும் பெற்றாள்.

ஒருநாள் பெருந்தெருவிலே கூனி மாதவியின் மாலையை விற்றாள்.கோவலன் அத ஆயிரம் பொன் கொடுத்து வாங்கினான்,பின், அவளுடனேயே மாதவியின் மனைக்குச் சென்றான்.கண்ணகியை மறந்து மாதவியின் வீட்டிலேயே தங்குபவனானான்.


வஞ்சையர் வேரன் ஒருவன், தன் காதலியுடன் புகாருக்கு இந்திர விழாக் காணவந்தான். மாதவியின் பதினொரு வகை ஆடல்களையும் தன் காதலிக்குக் காட்டி மகிழ்ந்தான். விழா முடிந்ததும் கோவலன் மாதவியோடு ஊடினான். மாதவி அவன் ஊடல் தீர்த்துக் கூடினாள். பின்னர்க் கடலாட விரும்பினாள். இருவரும் கடற்கரை சென்றனர். களித்திருக்கும் பிற மக்களோடு தாமும் கலந்தவராக அவர்கள் மகிழ்ந்திருந்தனர்


கோவலனும் மாதவியும் யாழிசையுடன் சேர்ந்து கானல்வரிப் பாடல்களைப் பாடுகின்றனர். இறுதியிலே,இருவரிடையே மீண்டும் ஊடல்.கோவலனின் மனம் மாறுகின்றது.அவனுடைய ஊழ்வினை சினந்துவந்து அவன் பாற் சேரத் தொடங்கிற்று. முழுநிலவினைப் போன்ற முகத்தினளான மாதவியை, அவளோடு கைகோத்து இணைந்து வாழ்ந்த தன் கைப்பிணைப்பை, அந்நிலையே நெகிழவிட்டவனாக ஆகிறான். மாதவியுடன் செல்லாது, தன் ஏவலாளர் தன்னைச் சூழ்ந்துவர, கோவலன், மாதவியைவிட்டுப் பிரிந்து, தான் தனியாகவே சென்று விட்டான். செயலற்ற நெஞ்சினளானாள் மாதவி. தன் வண்டியினுள்ளே சென்றும் அமர்ந்தாள். காதலன் தன்னுடன் வருதல் இல்லாமலேயே,தனியாகவே, தன் மனை சென்றாள்

Tuesday, October 7, 2014

மணிமேகலை- 6

மணிமேகலை- 6

உதயகுமரன் இறப்பிற்கு மணிமேகலையே காரணம் என எண்ணிய அரசன் அவளைச் சிறையில் இடுகிறான். அரசமாதேவி தன் மகன் மேல் கொண்ட பாசத்தினால் மணிமேகலையை வஞ்சித்து வருத்திட முயல்கிறாள். மணிமேகலையைச் சிறையிலிருந்து விடுவித்து அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறாள்.  அங்கு அவளுக்கு மயக்க மருந்து ஊட்டுகிறாள்.  அவளுக்குத் தீங்கு இழைக்குமாறு கல்லாத இளைஞன் ஒருவனை ஏவுகிறாள்;  புழுக்கறையில் அடைக்கிறாள்;  ஆனால் மணிமேகலை இக்கொடுஞ் செயல்களால் எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கண்டு அஞ்சித் தன் பிழையினை உணர்கிறாள்.  மணிமேகலை அவளுக்கு நல்லறங்களைப் போதிக்கிறாள்.  காமத்தின் கொடுமை, கொலையின் கொடுமை, கள்ளின் கொடுமை, பொய்யின் தீமை, களவின் துன்பம் எனத் தீய குற்றங்களின் தன்மையை உணர்த்துகிறாள்.  பசிபோக்குவதும் உயிர்களிடத்து அன்பு செலுத்துவதுமே அறம் என்கிறாள்.  அப்போது அங்கு வந்த அறவண அடிகள் அரசிக்கு மேலும் பல அறநெறிகளை அருளுகின்றார். மணிமேகலை அனைவரையும் வணங்கிச் சாவக நாட்டிற்குச் செல்கிறாள்.

சாவக நாட்டில் புண்ணியராசனாகப் பிறந்திருந்த ஆபுத்திரனைச் சந்திக்கிறாள்.  அவன் தன் பழம் பிறப்பை உணர்ந்து கொள்ள மணிபல்லவத் தீவிற்குச் செல்லுமாறு தூண்டுகிறாள். தானும் மணிபல்லவத் தீவை அடைகிறாள்.  அங்குப் புண்ணியராசன் தன் பிறப்பை உணர்ந்து கொள்கிறான்.  அப்போது காவல்தெய்வமான தீவதிலகை மணிமேகலையிடம்,  கோவலனின் முன்னோன் ஒருவன் கடலில் விழுந்து தவித்தபோது,  மணிமேகலா தெய்வம் அவனைக் காப்பாற்றிக் கரை சேர்த்தது.  உயிர்தப்பிய அவன் தான தருமங்கள் பல செய்தான். அவன் செய்த நற்செயல்களை அறிந்து கொள்ள வஞ்சி நகருக்குச் செல்லுமாறு கூறுகிறது.  மணிமேகலை புண்ணியராசனுக்கு அறம் உரைத்துப் பின் வஞ்சி நகருக்குப் புறப்படுகிறாள்.

மணிமேகலை வஞ்சி மாநகரை அடைந்து,   அங்கிருந்த சமயக் கணக்கராகிய அளவைவாதி, சைவவாதி, பிரமவாதி, வைணவவாதி, வேதவாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி,  பூதவாதி ஆகிய பலரும் தம்தம் சமயத்தின் நுண் பொருட்களை உரைக்கக் கேட்டு அறிகிறாள்.  அவள் மனம் அமைதி பெறவில்லை.  அங்கிருந்து காஞ்சி மாநகரம் செல்கிறாள்.  அங்கு அறவண அடிகளைச் சந்தித்து மெய்ப்பொருள் உரைத்தருளுமாறு வேண்டுகிறாள்.  அறவண அடிகள் மணிமேகலைக்குப் பிறர்மதமும் தம்மதமும் எடுத்துரைத்து மெய்ப்பொருளாகிய தரும நெறியின் நுண்மையான பொருட்களை விளக்குகிறார். மணிமேகலை அவர் உணர்த்திய ஞான விளக்கின் துணையால் தெளிவு பெறுகிறாள் முடிவில் ‘என் பிறப்புக்குக் காரணமாகிய குற்றங்கள் நீங்குக’  என வேண்டி நோன்பு நோற்கத் தொடங்குகிறாள். இந்நிகழ்ச்சியுடன் மணிமேகலைக் காப்பியக் கதை நிறைவு பெறுகிறது.

மணிமேகலை-4



மணிபல்லவத் தீவிலே தனியாக விடப்பட்ட மணிமேகலை விழித்தெழுந்து தனிமையால் துன்புற்று அழத் தொடங்குகிறாள். அப்போது அவள்முன் ஒரு புத்த தரும பீடிகை தோன்றுகிறது. தரும பீடிகை என்பது புத்தர் அமர்ந்து அறம் உரைத்த ஆசனம் ஆகும்.  அதைக் காண்போருக்கு அவர்களுடைய முந்தைய பிறப்புகள் விளங்கும். மணிமேகலை அதனை வணங்குகிறாள்.  அதன் மூலம் தன் முன்பிறப்பை உணர்கிறாள். முற்பிறப்பில் அசோதர நாட்டு மன்னன் இரவிவன்மன் என்பவனுக்கும் அரசி அமுதபதி என்பவளுக்கும் இலக்குமி என்னும் மகளாகப் பிறந்தது; இராகுலன் என்பவனை மணந்தது; அவன் பாம்பு தீண்டி இறந்தது;  அவனுடன் தீயில் புகுந்து உயிர் துறந்தது போன்ற விவரங்களை அறிந்து கொள்கிறாள் மணிமேகலை. முன்பிறப்பில் தன் கணவனான இராகுலன் என்பவனே இப்போது உதயகுமரனாகப் பிறவி எடுத்துள்ளான்.  எனவேதான் தன் நெஞ்சம் அவனை நாடுகிறது என்பதை மணிமேகலா தெய்வத்தின் மூலம் பின்னர் அறிந்துகொள்கிறாள்.


மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்கு அவள் விரும்பும் வேறு உருவத்தை அடைவதற்குரிய மந்திரத்தையும்,  வான்வழியாகச் சென்று வர உதவும் மந்திரத்தையும்,  பசியைப் போக்கும் மற்றொரு பெரிய மந்திரத்தையும் உரைத்துவிட்டுச் செல்கிறது.  அப்போது,  இந்திரன் ஏவலால் அத்தீவைக் காத்துவரும் தீவதிலகை என்னும் காவல் தெய்வம் அவள்முன் தோன்றுகிறாள்.  அவள் அத்தீவில் உள்ள கோமுகி என்னும் பொய்கையில், புத்தர் பிறந்த தினமான வைகாசித் திங்கள் விசாக நட்சத்திர முழுநிலவு நாளில் தோன்றும் அமுதசுரபி என்னும் பாத்திரத்தைப் பற்றிக் கூறுகிறாள்.  அப்பாத்திரம் ஆபுத்திரன் கையில் இருந்தது என்றும் அப்பாத்திரத்தில் இடும் உணவானது எடுக்க எடுக்கப் பெருகிக் கொண்டே இருக்கும் சிறப்புடையது என்றும் கூறுகிறாள். இன்று அப்பாத்திரம் உன்னை வந்து சேரும் என்றும் கூறுகிறாள்.  அதனைக் கேட்ட மணிமேகலை கோமுகிப் பொய்கையை வலம் வருகிறாள். அப்போது பொய்கையில் தோன்றிய அமுதசுரபி மணிமேகலையின் கையில் வந்து சேர்கிறது. அமுதசுரபியைப் பெற்ற மணிமேகலை வான்வழியே புகார் நகரை அடைகிறாள். அறவண அடிகளையும் மாதவியையும் சந்தித்து நடந்தவற்றைக் கூறுகிறாள்.


மணிமேகலைக்கு அறவண அடிகள்,  சிந்தாதேவி ஆபுத்திரனுக்கு அமுதசுரபியைக் கொடுத்த வரலாற்றைக் கூறுகிறார்.  ஆபுத்திரன் தருமம் செய்தது,  இந்திரன் செயலால் அவன் தன் உயிரை நீத்தது,  தற்போது அவன் சாவக நாட்டில் பிறந்திருப்பது போன்ற விவரங்களைக் கூறுகிறார்.  மேலும் ‘ஆபுத்திரன் மூலமாக உலக மக்களின் பசியைப் போக்கிய அமுதசுரபி பயன்படுத்தப்படாமல் இருப்பது தவறு.  எனவே நீ அப்பணியை மேற்கொள்’  எனவும் உரைக்கிறார்.  அதனைக் கேட்ட மணிமேகலை அறவண அடிகளை வணங்கி, அமுதசுரபியை ஏந்தியவாறு புகார் நகர வீதிக்கு வருகிறாள். அவளைப் புகார் நகர மக்கள் சூழ்ந்துகொள்கின்றனர்.  அவர்களில் வித்தியாதர மங்கையாகிய காயசண்டிகை என்பவள் கற்பில் சிறந்தவளான ஆதிரையிடம் முதல் பிச்சை பெறுமாறு கூறுகிறாள்.  ஆதிரையின் வரலாற்றையும் கூறுகிறாள்.

ஆதிரையின் கணவன் சாதுவன். அவன் தீய ஒழுக்கம் கொண்டு கணிகை ஒருத்தியுடன் வாழ்ந்து வந்தான். அவனுடைய பொருட்கள் தீர்ந்தபின் கணிகை அவனை வீட்டை விட்டு வெளியேற்றினாள். சாதுவன் பொருள் ஈட்டுவதற்காக வணிகர்களுடன் கப்பலில் சென்றான். கடும் காற்றால் கப்பல் கவிழ்ந்தது.  சாதுவன் தப்பி நாகர்கள் வாழும் மலைப்பக்கம் சேர்ந்தான். கப்பலில் தப்பிய சிலர் காவிரிப்பூம்பட்டினம் வந்தனர்.  சாதுவன் உயிரோடு இருப்பதை அறியாத அவர்கள் அவன் இறந்து விட்டதாகக் கூறினர்.  அதனைக் கேட்ட ஆதிரை தீயில் பாய்ந்து உயிர்விடத் துணிந்தாள்.  தீயில் குதித்தாள்.  ஆனால் தீ அவளைச் சுடவில்லை.  ஆதிரை ‘தீயும் சுடாத பாவியானேன்’  என்று வருந்தினாள். அப்போது ‘உன் கணவன் இறக்கவில்லை. விரைவில் திரும்புவான்’ என அசரீரி கேட்டது. ஆதிரை மகிழ்ச்சியோடு வீடு திரும்பி நல்ல அறங்களைச் செய்து வந்தாள்.

மணிமேகலை -5





கடல் கொந்தளிப்பிலிருந்து உயிர்தப்பி நாகர்மலையைச் சென்றடைந்த சாதுவனை நாகர்கள் பிடித்து அவனை உண்ண முயன்றனர்.  சாதுவன் நாகர்மொழியை அறிந்திருந்ததால் நாகர்களின் தலைவனோடு பேசி அவர்களுக்குக் கொல்லாமை அறத்தை அறிவுறுத்தினான். நல்வினை, தீவினை ஆகியன பற்றி விளக்கமாக எடுத்துரைத்தான்.  நல்லறிவு பெற்ற நாகர் தலைவன்,  சாதுவனுக்குப் பொன்னும் பொருளும் அள்ளித் தந்தான்.  அவற்றைப் பெற்று அங்கு வந்த சந்திரதத்தன் கப்பலில் சாதுவன் மீண்டான்.  ஆதிரை கணவனோடு மகிழ்ச்சியாக வாழ்ந்தாள்.  இவ்வாறு ஆதிரையின் வரலாற்றைக் கூறினாள் காயசண்டிகை.  மணிமேகலை ஆதிரை வீட்டினுள் நுழைகிறாள்.  ஆதிரை பிச்சையிட்டதும் அமுதசுரபியில் உணவு எடுக்க எடுக்கக் குறையாது வந்து கொண்டே இருந்தது. காயசண்டிகை மணிமேகலையிடம் ‘‘தாயே!  என் தீராப்பசியைத் தீர்த்தருள வேண்டும்’’ என வேண்டுகிறாள். மணிமேகலை ஒரு பிடி உணவு அள்ளியிட அவள் பசி தீர்ந்தது. பின் காயசண்டிகை தன் வரலாற்றை மணிமேகலைக்குக் கூறுகிறாள்.

‘வடதிசையில் காஞ்சனபுரம் என்பது என் ஊர். காவிரிப் பூம்பட்டினத்தில் நடைபெறும் இந்திர விழாவைக் காண நானும் என் கணவனும் வான் வழியே பறந்து வந்தோம். இடையே ஓர் ஆற்றங்கரையில் தங்கினோம். அங்கு விருச்சிகன் என்ற முனிவன் நீராடிவிட்டு வந்து உண்பதற்காக ஒரு பெரிய நாவல் கனியைத் தேக்கு இலையில் வைத்துவிட்டுச் சென்றிருந்தான். நான் என் தீவினையால் அக்கனியை என் காலால் சிதைத்துவிட்டேன். நீராடிவிட்டுத் திரும்பிய முனிவன் சினந்து, ‘இக்கனி பன்னிரண்டாண்டுக்கு ஒருமுறை ஒரு கனியைத் தரும் நாவல் மரத்தில் உண்டானது. இதை உண்பவர்கள் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பசியில்லாமல் இருப்பர்.   நான் பன்னிரண்டாண்டு நோன்பிருந்து இதை உண்ணும் வழக்கமுடையவன்.  இதை நீ சிதைத்தாய்.  ஆகவே இனி நீ வான் வழியே செல்லும் சக்தியை இழப்பாய். யானைத் தீ என்னும் தீராப்பசி நோயால் துன்பப்படுவாய். பன்னிரண்டு ஆண்டுக்குப்பின் கிடைக்கும் நாவல் கனியை நான் உண்ணும் நாளில் உன் பசி தீர்வதாக’ எனச் சபித்தான்.  முனிவன் சொன்ன பன்னிரண்டு ஆண்டுகள் முடியும் நாள் இதுபோலும், உன்கையால் உணவு பெற்றுப் பசிதீர்ந்தேன்’  என்று கூறிய காயசண்டிகை தன் நாட்டிற்குத் திரும்பிச் செல்கிறாள்.

மணிமேகலை,   உதயகுமரன் தன்னை அடையாளம் கண்டு கொள்ளாத வகையில் காயசண்டிகையின் வடிவம் கொண்டு பசிப்பிணி தீர்க்கும் நல்லறத்தைப் புரிந்து வருகிறாள். காயசண்டிகையின் வடிவில் இருப்பவள் மணிமேகலையே என்று அறிந்த உதயகுமரன் அவளை அடைய முற்படுகிறான். அப்போது காயசண்டிகையைத் தேடி வந்த அவள் கணவன் காஞ்சனன் என்பவன் உதயகுமரன் காயசண்டிகையை அடைய விரும்புகிறான் எனத் தவறாக எண்ணி அவனை வாளால் வெட்டிக் கொன்று விடுகிறான்.  அங்கே இருந்த கந்திற்பாவை காஞ்சனனுக்கு உண்மையை உணர்த்துகிறது. காயசண்டிகை ஊர் திரும்பும்போது யாரும் மேலே பறக்கக் கூடாத விந்திய மலை மீது பறந்து சென்றதையும் அதனால் மலையைக் காக்கும் விந்தாகடிகை அவளை இழுத்துத் தன் வயிற்றுக்குள் அடக்கிக் கொண்டதையும் கூறுகிறது. காஞ்சனன் வருந்தி ஊர் திரும்புகிறான்.

Saturday, October 4, 2014

மணிமேகலை - 3


மணிபல்லவத் தீவிலே தனியாக விடப்பட்ட மணிமேகலை விழித்தெழுந்து தனிமையால் துன்புற்று அழத் தொடங்குகிறாள். அப்போது அவள்முன் ஒரு புத்த தரும பீடிகை தோன்றுகிறது. தரும பீடிகை என்பது புத்தர் அமர்ந்து அறம் உரைத்த ஆசனம் ஆகும்.  அதைக் காண்போருக்கு அவர்களுடைய பழம்பிறப்புகள் விளங்கும். மணிமேகலை அதனை வணங்குகிறாள்.

அதன் மூலம் தன் பழம்பிறப்பை உணர்கிறாள். முற்பிறப்பில் அசோதர நாட்டு மன்னன் இரவிவன்மன் என்பவனுக்கும் அரசி அமுதபதி என்பவளுக்கும் இலக்குமி என்னும் மகளாகப் பிறந்தமை; இராகுலன் என்பவனை மணந்தமை; அவன் பாம்பு தீண்டி இறந்தமை;  அவனுடன் தீயில் புகுந்து உயிர் துறந்தமை போன்ற விவரங்களை அறிந்து கொள்கிறாள் மணிமேகலை. பழம்பிறப்பில் தன் கணவனான இராகுலன் என்பவனே இப்போது உதயகுமரனாகப் பிறவி எடுத்துள்ளான்.  எனவேதான் தன் நெஞ்சம் அவனை நாடுகிறது என்பதை மணிமேகலா தெய்வத்தின் மூலம் பின்னர் அறிந்துகொள்கிறாள்.


மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்கு அவள் விரும்பும் வேற்று உருவத்தை அடைவதற்குரிய மந்திரத்தையும்,  வான்வழியாகச் சென்று வர உதவும் மந்திரத்தையும்,  பசியைப் போக்கும் மற்றொரு பெரிய மந்திரத்தையும் உரைத்துவிட்டுச் செல்கிறது.

 அப்போது,  இந்திரன் ஏவலால் அத்தீவைக் காத்துவரும் தீவதிலகை என்னும் காவல் தெய்வம் அவள்முன் தோன்றுகிறாள்.  அவள் அத்தீவில் உள்ள கோமுகி என்னும் பொய்கையில், புத்தர் பிறந்த தினமான வைகாசித் திங்கள் விசாக நட்சத்திர முழுநிலவு நாளில் தோன்றும் அமுதசுரபி என்னும் பாத்திரத்தைப் பற்றிக் கூறுகிறாள்.  அப்பாத்திரம் ஆபுத்திரன் கையில் இருந்தது என்றும் அப்பாத்திரத்தில் இடும் உணவானது எடுக்க எடுக்கப் பெருகிக் கொண்டே இருக்கும் சிறப்புடையது என்றும் கூறுகிறாள். இன்று அப்பாத்திரம் உன்னை வந்து சேரும் என்றும் கூறுகிறாள்.  அதனைக் கேட்ட மணிமேகலை கோமுகிப் பொய்கையை வலம் வருகிறாள். அப்போது பொய்கையில் தோன்றிய அமுதசுரபி மணிமேகலையின் கையில் வந்து சேர்கிறது. அமுதசுரபியைப் பெற்ற மணிமேகலை வான்வழியே புகார் நகரை அடைகிறாள். அறவண அடிகளையும் மாதவியையும் சந்தித்து நடந்தவற்றைக் கூறுகிறாள்.


மணிமேகலைக்கு அறவண அடிகள்,  சிந்தாதேவி ஆபுத்திரனுக்கு அமுதசுரபியைக் கொடுத்த வரலாற்றைக் கூறுகிறார்.  ஆபுத்திரன் தருமம் செய்தது,  இந்திரன் செயலால் அவன் தன் உயிரை நீத்தது,  தற்போது அவன் சாவக நாட்டில் பிறந்திருப்பது போன்ற விவரங்களைக் கூறுகிறார்.  மேலும் ‘ஆபுத்திரன் மூலமாக உலக மக்களின் பசியைப் போக்கிய அமுதசுரபி பயன்படுத்தப்படாமல் இருப்பது தவறு.  எனவே நீ அப்பணியை மேற்கொள்’  எனவும் உரைக்கிறார்.  அதனைக் கேட்ட மணிமேகலை அறவண அடிகளை வணங்கி, அமுதசுரபியை ஏந்தியவாறு புகார் நகர வீதிக்கு வருகிறாள். அவளைப் புகார் நகர மக்கள் சூழ்ந்துகொள்கின்றனர்.  அவர்களில் வித்தியாதர மங்கையாகிய காயசண்டிகை என்பவள் கற்பில் சிறந்தவளான ஆதிரையிடம் முதல் பிச்சை பெறுமாறு கூறுகிறாள்.  ஆதிரையின் வரலாற்றையும் கூறுகிறாள்.

மணிமேகலை-2



உதயகுமரன் என்பவன் அந்நாட்டு இளவரசன்.அவன் மணிமேகலை மீது காதல் கொண்டான்.அவளைத் தேடி அவன் உவவனத்திற்கு வந்தான்.அவனிடமிருந்து தப்பிக்க நினைத்த மணிமேகலை அங்கிருந்த பளிங்கினால் அமைக்கப்பட்ட பளிக்கறை மண்டபத்தில் புகுந்து கொண்டாள்.உதயகுமரனுக்கோ பளிக்கறைக்குள்ளே செல்ல வழி தெரியவில்லை.அதனால் வருந்தியவன், மணிமேகலையைப் பலவாறு இழித்துக் கூறிவிட்டுத் திரும்பிச் சென்றான்.

உதயகுமரன் சென்றபின் மணிமேகலை வெளியே வருகிறாள்.தன் தோழி சுதமதியிடம் தன் நெஞ்சமும் உதயகுமரனை நாடுவதை எடுத்துச் சொன்னாள்.

   அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும் என்ற உறுதியும் கொள்கிறாள். அப்போது இந்திர விழாவினைக் காண வந்த மணிமேகலா தெய்வம் மணிமேகலையின் நிலையை அறிந்துகொள்கிறது.    எனவே மணிமேகலையையும் சுதமதியையும் உதயகுமரனிடமிருந்து தப்புவிக்க அவர்களைச் *சக்கரவாளக் கோட்டத்திற்குச் செல்லுமாறு கூறுகிறது. . மேலும் சக்கரவாளக் கோட்டத்தின் வரலாறையும் சொன்னது.

இதற்குள் இரவுப் பொழுதாகிறது. சுதமதி அங்கேயே உறங்கிவிடுகிறாள்.    உறங்க ஆரம்பித்த மணிமேகலையை மணிமேகலா தெய்வம் உவவனத்திலிருந்து முப்பது யோசனைத் தூரம் வான் வழியாக எடுத்துச் சென்று மணிபல்லவம் என்னும் தீவில் சேர்ப்பித்துவிட்டுச் செல்கிறது.




(*ஒருமுறை ஒரு பார்ப்பனச் சிறுவன் அந்தச் சுடுகாட்டுக்குள் நுழைந்து விடுகிறான். அங்கு கண்டவற்றால் பயந்து போய் வீட்டுக்கு ஓடிச் சென்று, பயத்தால் அங்கு இறந்துவிடுகிறான். அவனது தாய், தந்தைக்குக் கண் தெரியாது. அந்தச் சிறுவன்தான் அவர்களது ஒரே நம்பிக்கை. அவன் இறந்து போனதைப் பொறுக்க முடியாமல் அவன் தாய் கோதமைஎன்னும் பெயருடையவள், அவனைத் தூக்கிக் கொண்டு சுடுகாட்டின் புறத்தே இருந்த சம்பாபதி என்னும் தெய்வம் இருக்கும் கோவிலுக்கு வருகிறாள்.
 அவளை மனத்தால் தியானிக்க, அந்தத் தெய்வம் கோதமையின் அகக் கண்ணில் தெரிந்தது. அவளிடம் தன் குறையைச் சொல்லி, தன் மகனை உயிர்ப்பிக்க வேண்டினாள். அது இயலாது என்று சம்பாபதி கூறவே, தன் உயிரை எடுத்துக் கொண்டு, மகன் உயிரை மீட்டுத்தர வேண்டினாள். கர்ம பலனால் பிறப்பும், இறப்பும் நேர்வதால், தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று சம்பாபதி கூறினாலும், கோதமையின் மீது இரக்கம் கொண்டு ஒருவேளை பிரம்மன், தேவர்கள் போன்றவர்களால் உயிர் கொடுக்கக்கூடும் என்று சொல்லி, எல்லாத் தெய்வங்களையும் அங்கு அழைக்கிறாள்.
நான்கு வகைப் பட்ட அரூபப் பிரம்மர்களையும்,
பதினாறு வகைப்பட்ட உரூபப் பிரம்மர்களையும் ,
சூரியன், சந்திரன் என்னும் இரண்டு ஒளிக் கடவுளர்களையும்,
ஆறு வகைப்பட்ட தேவக் கூட்டங்களையும்,
பல் வேறு வகைப் பட்ட அசுரர்களையும்,
பெரும் துன்பம் தரும் எட்டு வகைப் பட்ட நரகர்களையும்,
வானத்தில் சுற்றி வரும் விண்மீன் கூட்டங்களையும்,  நாண்மீன்களையும்,கோள்களையும் தன்னகத்தே அடக்கிக் கொண்டிருக்கின்ற சக்கரவாளமாகியஇந்த அண்டத்தில்
உறைகின்ற, மக்களுக்கு வரம் தரும் ஆற்றல் படைத்த தேவ கணங்களை சம்பாபதி அங்கே வரவழைத்தாள்.

பொதுவாகச் சக்கரவாளத்தில்தான் அவர்களை ஒன்றாகப் பார்க்க முடியும். அவர்கள் புகார் நகர சுடுகாட்டில் ஒன்று சேர வந்துவிடவே அந்தச் சுடுகாடே சக்கரவாளம் போலாயிற்று.
அதனால் அன்று முதல் அந்தச் சுடுகாட்டை. சக்கரவாளக் கோட்டம் என்றே அழைக்க ஆரம்பித்தனர். நாளடைவில், அந்தப் பழைய சம்பவம் மறந்து போனதால், சுடுகாடு என்றே அழைத்தனர். இவ்வாறு புகார் நகரத்தில் தேவருலகமான சக்கரவாளத்தினர் ஒரு முறை வந்தனர் என்று மணிமேகலை கூறுகிறது).

                                                       (தொடரும்)